சுயநிதி கல்லூரி ஆசிரியர்களின் பிரச்சனைகள் - 01-04-2012 - மூட்டா கவன ஈர்ப்பு கருத்தரங்கம் - லீலாவதி அரங்கம், மதுரை
சுயநிதி கல்லூரி / வகுப்பு, மனோ கல்லூரி மற்றும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி ஆசிரியர்களின் பணிநிலைகள் குறித்து மூட்டா சார்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் 01.04.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று மதுரையில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு மூட்டா தலைவர் பேரா.S. விவேகானந்தன் தலைமை வகித்தார். மூட்டா இரண்டாம் மண்டலத்தலைவர் முனைவர். N.தேன்பாண்டியன் அவர்களின் வரவேற்புரையோடு துவங்கிய கருத்தரங்கில், சுயநிதி மற்றும் உறுப்புக் கல்லூரி ஆசிரியர்களின் பிரச்சனைகளை மூட்டா துணைத்தலைவர் பேரா.J.ஜான்சன் விளக்கினார்.
பணிப்பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் சுயநிதி ஆசிரியர்கள் மேற்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும், தமிழ்நாடு தனியார் கல்லூரி ஒழுங்காற்றுச் சட்ட(1976)த்தில் இடம் பெற வேண்டிய சட்டத் திருத்தங்கள் பற்றியும் உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் திரு.T.லஜபதி ராய் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
மதுரை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.R.அண்ணாதுரை, பாட்டாளி மக்கள் கட்சி பொதுச்செயலாளர் திரு.R.வடிவேல் இராவணன், மறுமலர்ச்சி திராவிடர் முன்னேற்ற கழகத்தின் தொழிற்சங்க மாநிலப் பொதுச்செயலாளர் திரு மகபூப் ஜான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழக மாநிலச் செயலாளர் திரு.V.P.இன்குலாப், பல்கலை ஆசிரியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் முனைவர்.K.பாண்டியன், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர்.S.தமிழ்மணி, மதுரை காமராசர் பல்கலைக்கழக் ஆசிரியர் பேரவையின் பொதுச்செயலாளர் முனைவர்.P.இளங்கோவன், தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு.P.கனகராசன், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு.K.S.கனகராஜ் ஆகியோர் சுயநிதி ஆசிரியர்களின் பணிநிலை மேம்பாடு குறித்து உரையாற்றினர்.
சுயநிதி மற்றும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு, பணிநிலைகளை மேம்படுத்துதல், பல்வேறு விடுப்புச் சலுகைகள் மற்றும் சட்டப்படியான உரிமைகளை தமிழக அரசு வழங்கக்கோரும் தீர்மானங்கள் மூட்டா இணைப் பொதுச்செயலாளர் பேரா.C.கணேசன் அவர்களால் முன்மொழியப்பட்டு, கருத்தரங்கில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
மூட்டா பொதுச்செயலாளர் பேரா.T.மனோகர ஜஸ்டஸ் நிறைவுரையாற்றிட, கருத்தரங்கில் கலந்துகொண்ட அனைவருக்கும் மூட்டா இரண்டாம் மண்டலச் செயலாளர் பேரா.S.கல்யாணராமன் நன்றி கூறினார். கருத்தரங்கில் 50 பெண் ஆசிரியர்கள் உள்பட சுமார் 250 பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.